ஐரோப்பா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கடும் மற்றும் அசாதாரண வெப்பநிலைக்கு முகங்கொடுத்து வருகின்றனர். வெப்பத்திலிருந்து தப்பிக்க நீர்நிலைகளில் குளிக்கச் சென்றவர்களில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பிரான்சில் 40 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்சில் தற்போது நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக, பகல் மற்றும் இரவு நேரங்களிலும் அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் நாட்டின் சுமார் பாதிப் பகுதிகளை உள்ளடக்கிய 54 நிர்வாகப் பிரிவுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்சுடன் சேர்த்து இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் பிரதமர் Sébastien Lecornu கூறுகையில், கடந்த வியாழக்கிழமை முதல் உயிரிழந்த 40 பேரில் பெரும்பாலானோர் இளைஞர்கள் எனத் தெரிவித்தார்.
இவ்வாண்டு கோடை காலத்தின் ஆரம்பத்திலேயே ஏற்பட்டுள்ள இந்த வெப்ப அலை மிகவும் தீவிரமானதாகக் கருதப்படுவதுடன், அதன் கால அளவு இன்னும் உறுதியாக கணிக்கப்படவில்லை என பிரான்ஸ் வானிலை சேவை Météo-France தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை, 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஐரோப்பாவை தாக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க வெப்ப அலையை நினைவூட்டுவதாகவும் கூறப்படுகிறது. அப்போது பிரான்சில் மட்டும் சுமார் 15,000 பேர் உயிரிழந்தனர்.
ஐரோப்பா உலகில் மிக வேகமாக வெப்பமடைந்து வரும் கண்டமாக மாறியுள்ளதாக Copernicus Climate Change Service தெரிவித்துள்ளது. 1980களிலிருந்து ஐரோப்பாவின் வெப்பநிலை, உலக சராசரியை விட இரு மடங்கு வேகத்தில் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் ஐரோப்பா முழுவதும் 200,000-க்கும் அதிகமானோர் வெப்பத்துடன் தொடர்புடைய காரணங்களால் உயிரிழந்துள்ளனர் என World Health Organization தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலான உயிரிழப்புகளை தடுப்பது சாத்தியமாக இருந்திருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





