கொங்கோவில் மனிதாபிமான சேவையில் ஈடுபட்டு நாடு திரும்பிய மருத்துவர் ஒருவருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சு புதன்கிழமை (24) அறிவித்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் எபோலா பரவலின் பின்னணியில், பிரான்ஸ் தேசிய எல்லைக்குள் பதிவான முதல் எபோலா நோயாளர் இதுவாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பவம் பிரான்ஸ் பிரதான நிலப்பரப்பில் (Mainland France) பதிவாகியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்து தற்போது குறைவாக இருப்பதாகவும் பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கொங்கோவில் பரவி வரும் எபோலா தொற்று இதுவரை 1,000-க்கும் அதிகமானோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், 267 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட தகவலின்படி, இந்த எபோலா பரவல் ஆரம்பித்த முதல் மாதத்திலேயே பதிவான உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை, முந்தைய பல எபோலா பரவல்களைவிட அதிகமாக உள்ளது.





