தாய்லாந்தில் 17 வயது இளம்பெண்ணின் நிர்வாண சடலம் பயணப்பெட்டிக்குள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 46 வயதுடைய ஆஸ்திரேலிய பிரஜை ஒருவர் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பட்டாயா நகரைச் சேர்ந்த டன்சனோக் டொன்ஹோம்லா என்ற இளம்பெண் காணாமல் போனதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சைமன் பீட்டர் கார்மன் என்பவர் பாங்கொக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், பட்டாயா நகர ரயில் பாதைக்கு அருகில் இருந்த பயணப்பெட்டிக்குள் இளம்பெண்ணின் சடலத்தை பொலிஸார் மீட்டனர்.
சந்தேகநபர் மீது கொலை, மரணத்திற்கான காரணத்தை மறைக்கும் நோக்கில் சடலத்தை மறைத்தல் மற்றும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுமியை ஒழுக்கக்கேடான நோக்கத்திற்காக கடத்தல் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
எனினும், அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார். பணம் தொடர்பான தகராறின்போது தற்காப்புக்காக செயல்பட்டதே இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு காரணம் என அவர் தெரிவித்ததாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்திற்கு முன்பும் பின்னரும் இருவரும் ஒன்றாக இருந்ததையும், பின்னர் சந்தேகநபர் ஒரு பயணப்பெட்டியை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்வதையும் கண்காணிப்பு கமெரா காட்சிகள் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்துவரும் நிலையில், சந்தேகநபர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.





