பொதுமக்கள் நேரடியாக பொலிஸ்மா அதிபரிடம் (IGP) முறைப்பாடுகளை முன்வைக்கக்கூடிய ‘Tell IGP’ திட்டத்தை இலங்கை பொலிஸார் 2026 ஆம் ஆண்டில் மறுசீரமைப்புடன் மீள அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த சேவையின் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் தங்களது முறைப்பாடுகளை இணையவழியாக சமர்ப்பிக்க முடியும்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல், போக்குவரத்து விதிமுறை மீறல்கள், பொது இடையூறுகள், ஊழல் மற்றும் ஏனைய குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை நேரடியாக IGP-க்கு அனுப்பும் வசதி இதில் வழங்கப்பட்டுள்ளது.
பெறப்படும் முறைப்பாடுகள் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு உடனடியாக விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்படுவர். முறைப்பாடு நியாயமான முறையில் தீர்க்கப்படவில்லை எனக் கருதினால், அதனை மீண்டும் IGP-க்கு அனுப்பும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சேவையை www.police.lk என்ற பொலிஸாரின் உத்தியோகபூர்வ இணையத்தளம், https://telligp.police.lk அல்லது telligp@police.gov.lk மின்னஞ்சல் முகவரி ஊடாகப் பயன்படுத்த முடியும்.
நாடு முழுவதும் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் 48 பிராந்திய பொலிஸ் பிரிவுகளில் கணினி இயக்குநர்கள் பயிற்றுவிக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இத்திட்டம் பொலிஸ்மா அதிபரின் நேரடி மேற்பார்வையில் முன்னெடுக்கப்படுவதாகவும் இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





