களுபோவில தென் கொழும்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்ட இதய கத்தீட்டர்மயமாக்கல் ஆய்வகம் (Cath Lab) மற்றும் பல நவீன சிகிச்சைப் பிரிவுகள் ஜூன் 30 ஆம் திகதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படவுள்ளன.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டுதலின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய வசதிகள், நாட்டில் இதய மற்றும் இரத்த நாள நோய்களுக்கான கண்டறிதல் மற்றும் சிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்தும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, களுபோவில போதனா வைத்தியசாலையில் இதய கத்தீட்டர்மயமாக்கல் ஆய்வகம் (Cath Lab), டிஜிட்டல் சப்ட்ராக்ஷன் அஞ்சியோகிராபி (DSA) பிரிவு மற்றும் சிறுநீரக, சிறுநீரகப் பாதைக் கற்களை உடைக்கும் லித்தோட்ரிப்சி (Lithotripsy) பிரிவு ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படுகின்றன.
மேலும், இந்த வாரத்திலேயே அரச வைத்தியசாலை அமைப்பில் நான்கு நவீன Cath Lab-கள் சேவையில் இணைக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் Cath Lab ஏற்கனவே ஜூன் 27 ஆம் திகதி திறக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய வைத்தியசாலை மற்றும் களுபோவில போதனா வைத்தியசாலையிலும் புதிய Cath Lab-கள் சேவையில் இணைக்கப்படவுள்ளன.
செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான நேரடி படமெடுக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த நவீன அமைப்புகள், நோயாளிகளுக்கான துல்லியமான மற்றும் விரைவான சிகிச்சையை வழங்குவதுடன், கதிர்வீச்சு பாதிப்பையும் கணிசமாகக் குறைக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.





