சீனாவை விட்டு தன்னிச்சையாக வெளியேறி அமெரிக்காவில் வசித்து வந்த கோடீஸ்வர தொழிலதிபர் குவோ வென்குய் (Guo Wengui), மிகப்பெரிய நிதி மோசடி வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து 30 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2018 முதல் 2023 வரை ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை போலியான முதலீட்டு திட்டங்கள் மூலம் மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த மோசடியால் உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வாழ்நாள் சேமிப்பை இழந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி அனலிசா டோரஸ், சீனாவில் ஜனநாயக மாற்றத்தை விரும்பிய மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி, அவர்களது பணத்தை ஆடம்பர வாழ்க்கைக்காக மோசடி செய்ததாகக் குறிப்பிட்டார்.
மேலும், மோசடி மூலம் சம்பாதித்ததாகக் கூறப்படும் 889 மில்லியன் அமெரிக்க டொலரை அரசிடம் ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குவோ வென்குய் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில் 9 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார்.





