இந்தோனேசியாவின் முன்னாள் கல்வி அமைச்சர் நதீம் மகாரிம் (Nadiem Makarim), பள்ளிகளுக்காக Google Chromebook மடிக்கணினிகள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
2019 முதல் 2022 வரை செயல்படுத்தப்பட்ட கல்வி டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் Chromebook கொள்வனவுகளில் முறைகேடு இடம்பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
நீதிமன்றம் அவருக்கு 1 பில்லியன் இந்தோனேசிய ரூபியா அபராதமும், 809.6 பில்லியன் ரூபியா இழப்பீடும் செலுத்த உத்தரவிட்டுள்ளது. இழப்பீட்டை செலுத்தத் தவறினால், மேலும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கில் அரசுத் தரப்பு, Chromebook கணினிகளுக்கே ஏற்ற தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாகவும், இதன் மூலம் அரசுக்கு பாரிய நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டியது.
எனினும், Google நிறுவனம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளதுடன், அமைச்சக அதிகாரிகளுக்கு எந்தவித சலுகையோ அல்லது நன்மையோ வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.





