கொழும்பு 03, ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் அமைந்துள்ள சீன சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை (CAA) சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ரூ.3 இலட்சம் அபராதம் விதித்துள்ளது.
மேலும், வழக்குப் பொருள்களாக கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களையும் அழிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது பல்வேறு சட்ட மீறல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வர்த்தக நிலையம் விலை குறிப்பிடப்படாத பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததுடன், விநியோகஸ்தர் பற்றுச்சீட்டுகள் மற்றும் ரசீதுகளை பராமரிக்கத் தவறியிருந்ததோடு, அதிகபட்ச சில்லறை விலை (MRP), உற்பத்தியாளர் அல்லது இறக்குமதியாளர் விபரங்கள் உள்ளிட்ட கட்டாய லேபிள் தகவல்கள் இல்லாத பொருட்களையும் விற்பனை செய்திருந்ததாக தெரியவந்துள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் நுகர்வோரை தவறாக வழிநடத்துவதோடு, நியாயமான வர்த்தகத்தையும் பாதிப்பதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்தல், விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாதல் மற்றும் கட்டாய லேபிள்கள் இன்றி பொருட்களை விற்பனை செய்தல் போன்ற சட்ட மீறல்கள் தொடர்பில் 1977 என்ற இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்யுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





