பானப் பொருட்களில் சர்க்கரை அளவைக் குறிக்கும் கட்டாய வண்ணக் குறியீட்டு (Colour-Coded Sugar Labelling) விதிமுறைகளில் அரசு புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் உணவுச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பின்படி, கண்ணாடி போத்தல்களுக்கான மாற்று வட்ட வடிவ லோகோ, பழைய போத்தல்களுக்கான அமலாக்கக் கால நீட்டிப்பு மற்றும் சில வணிகப் பயன்பாட்டு உணவுப் பொருட்களுக்கு விலக்கு உள்ளிட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய நடைமுறையின்படி, 100 மில்லிலிட்டருக்கு 8 கிராமுக்கு மேல் சர்க்கரை கொண்ட பானங்களுக்கு சிவப்பு, 2.5 முதல் 8 கிராம் வரை உள்ளவற்றுக்கு மஞ்சள், 2.5 கிராமுக்கு குறைவானவற்றுக்கு பச்சை நிற அடையாளம் கட்டாயமாக இடம்பெற வேண்டும்.
புதிய திருத்தங்களின் கீழ், வழக்கமான செவ்வக வடிவ அடையாளத்தை இடுவதற்கு இடவசதி இல்லாத கண்ணாடி போத்தல்களில் வட்ட வடிவ வண்ணக் குறியீட்டு லோகோவை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கண்ணாடி போத்தல்களில் சர்க்கரை குறியீட்டை போத்தல் மூடி அல்லது மூடிப்பகுதியில் காட்சிப்படுத்தும் அனுமதியும் 2026ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படாமல், மேலதிக தயாரிப்பு அல்லது மறுவிற்பனைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் வணிகங்களுக்கு இடையிலான (Business-to-Business) உணவுப் பொருட்களுக்கு இந்த விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், சர்க்கரை அளவுக்கான வரம்புகளிலும், சிவப்பு–மஞ்சள்–பச்சை வண்ணக் குறியீட்டு முறையிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.





