மஜீட். ARM

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவும், அம்பாறை மாவட்ட உயிர் காக்கும் மற்றும் அவசரக்கால மீட்புக் குழுவும் இணைந்து (அக்கரைப்பற்று,அட்டாளைச்சேனை, நிந்தவூர், சம்மாந்துறை ) பகுதியை சேர்ந்த 10 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த 15 நாள் நீச்சல் பயிற்சி நெறியின் நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (ஜூலை 4) திகதி அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி நீச்சல் தடாக முன்றலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ள, கௌரவ அதிதியாக ரிஷாட் புகாரி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இப்பயிற்சிநெறியின் கீழ், மாணவர்களுக்கு அடிப்படை நீச்சல் நுணுக்கங்கள், நீர் பாதுகாப்பு மற்றும் அவசரக்காலப் பதில் நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

பயிற்சியின் வளவாளர்களாகக் கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட உயிர் காக்கும் மற்றும் அவசரக்கால மீட்புக் குழுவின் தலைவர், உப தலைவர், அமைப்பாளர் மற்றும் குழுவின் முக்கிய உறுப்பினர்கள், தொடர்ச்சியாக 15 நாட்கள் இடம்பெற்ற இந்தப் பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.














