பெலியகொட பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலையொன்றில் இருந்து 42 இலட்சம் கிலோகிராமுக்கும் அதிகமான காலாவதியான சீனி மீள்பொதியிடப்பட்டு குறைந்த விலையில் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அந்தக் களஞ்சியசாலையை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை (CAA) சீல் வைத்துள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை மற்றும் வலான மத்திய ஊழல் ஒழிப்பு விசேட அதிரடிப்படை இணைந்து நேற்று (06) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, களனிய – பெத்தியகொட பகுதியில் இயங்கிய பெரியளவிலான சீனி இறக்குமதி நிறுவனமொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
விசாரணைகளில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்ட காலாவதியான சீனி, காலாவதியாகாத சீனியுடன் சேர்த்து களஞ்சியத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், காலாவதியான சீனி மீண்டும் பொதியிடப்பட்டு, சந்தை விலையை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சோதனை நடைபெற்ற வேளையில், தலா 50 கிலோகிராம் எடையுடைய சுமார் 85,000 சீனி மூட்டைகள் களஞ்சியசாலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் நிறைவடையும் வரை முழு களஞ்சிய வளாகமும் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.





