( ஜீ + மின்மினி மின்ஹா )
சம்மாந்துறை பிரதேச சபையின் 5வது கூட்டத்தொடரின் 13வது அமர்வு நேற்று (07) தவிசாளர். கௌரவ – ஐ.எல்.எம். மாஹிர் தலைமையில் நடைபெற்றபோது, சபை நடவடிக்கைகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்ட சபை உறுப்பினர் ஆசிரியர் ஏ.சீ.எம். நயீம் (ACMC), பிரதேச சபையின் கண்ணியத்தையும் ஒற்றுமையையும் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
சபை மற்றும் அதன் நிர்வாகம் தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தேவையற்ற கருத்துகள் வெளியிடப்படுவது பிரதேச சபையின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்ட அவர், பொது பிரதிநிதிகள் அனைவரும் தங்களது கருத்துக்களை பொறுப்புணர்வுடனும், நிதானத்துடனும் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
சபையின் கண்ணியத்தைப் பேணுவது ஒவ்வொரு உறுப்பினரின் பொறுப்பாகும் என்றும், உறுப்பினர்கள் பரஸ்பர மரியாதை, ஒழுக்கம் மற்றும் ஒற்றுமையுடன் செயல்பட்டாலேயே மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், சபைக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் நிர்வாகத் தகவல்களை பாதுகாப்பது அனைத்து உறுப்பினர்களின் கடமையாகும் என சுட்டிக்காட்டிய அவர், சபையின் உள்விவகாரங்களை தேவையற்ற வகையில் வெளியில் எடுத்துரைப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சபையை சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக ஒழுங்காக வழிநடத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், விதிமுறைகளை மீறி சபையின் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இறுதியாக, மக்கள் வழங்கிய ஆணையை மதித்து, அனைத்து உறுப்பினர்களும் கண்ணியத்துடனும் ஒற்றுமையுடனும் செயல்பட்டு, பிரதேசத்தின் அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என உறுப்பினர் ஏ.சீ.எம். நயீம் (ஆசிரியர்) சபையில் வலியுறுத்தினார்.





