சம்மாந்துறை, ஜூலை 18 – அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் அமைந்துள்ள ஹலால் கலாபீடத்தின் ஹலால் அகதியா பாடசாலையின் நான்காம் ஆண்டு நிறைவு மற்றும் ஐந்தாம் ஆண்டு ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு வருடாந்த மாபெரும் கந்தூரி வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
ஹலால் கலாபீடத்தின் ஸ்தாபகரும் ஹலால் அகதியா பாடசாலையின் அதிபருமான எம்.எம். பௌசான் (MM. Fowsan) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு ஆன்மிக நிகழ்வுகளுடன் சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வின் சிறப்பு துஆ பிரார்த்தனையில் முன்னாள் ராஜாங்க அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் கலாபீட நிர்வாகிகள், அகதியா பாடசாலை அதிபர்கள், ஹலால் கலாபீடத்தின் தலைமை உஸ்தாத் ஹிஜாஸ் மௌலவி, மாணவர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள், சமூக நலன் விரும்பிகள், நன்கொடையாளர்கள், ஆதரவாளர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஏனைய மத சகோதர, சகோதரிகள் உள்ளிட்ட சுமார் 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் ஹலால் கலாபீடத்தின் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.





