கொழும்பு, ஜூலை 21 – இலங்கை துறைமுக அதிகார சபையின் (SLPA) செயற்பாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில் இரண்டு உயர்திறன் கொண்ட இழுவைப் படகுகளை (Tugboats) குத்தகைக்கு பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
SLPA இன் செயல்பாட்டு தேவைகள் தொடர்பான விரிவான மதிப்பீட்டின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
70 டன் Bollard Pull (BP) திறன் கொண்ட Twin Azimuth Stern Drive வகையைச் சேர்ந்த இரண்டு துறைமுக இழுவைப் படகுகளை குறிப்பிட்ட காலத்திற்கு குத்தகைக்கு பெறுவதற்கு 2025 ஜனவரி 6 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து சர்வதேச போட்டி கொள்முதல் நடைமுறையின் கீழ் கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டதுடன், மூன்று நிறுவனங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பித்தன. மதிப்பீட்டின் பின்னர் குறைந்த விலையில் பொருத்தமான முன்மொழிவை சமர்ப்பித்த நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்க உயர்மட்ட கொள்முதல் குழு பரிந்துரைத்தது.
அதன்படி, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, இலங்கை கப்பல் நிறுவனத்திடமிருந்து (Sri Lanka Shipping Company Limited) இரண்டு இழுவைப் படகுகள் 5 வருட காலத்திற்கு 17.16 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் (வரிகள் மற்றும் கட்டணங்கள் தவிர்த்து) பெறப்படவுள்ளன.





