இலங்கையின் மிக வேகமான ஓட்ட வீரராக அறியப்படும் யுபுன் அபேகோன் (Yupun Abeykoon) தடகள விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
உணர்ச்சிபூர்வமான அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், “எனது நாட்டிற்கு நான் எதுவும் கடன்பட்டிருக்கவில்லை; ஆனால் உலகிற்கு நான் கடன்பட்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
தனது விளையாட்டு வாழ்க்கை முழுவதும் ஆதரவளித்த குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், சக வீரர்கள், இலங்கை இராணுவம், இலங்கை தடகள சங்கம், இத்தாலிய பயிற்சி குழு, ஆதரவாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள இலங்கையர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டிற்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுத்தந்தது தனது வாழ்க்கையின் மிகப்பெரிய கௌரவம் என குறிப்பிட்ட அவர், இன்னும் போட்டியிடும் திறன் இருந்தபோதும் ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்பட்டது வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.
தனது ஓய்வு முடிவுக்கான காரணங்களையும், இலங்கை தடகளத்தின் தற்போதைய நிலை குறித்த தனது அனுபவங்களையும் எதிர்காலத்தில் பகிர்ந்து கொள்வதாக யுபுன் அபேகோன் தெரிவித்துள்ளார்.





