இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளிலேயே மிகப்பெரிய புதைகுழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 450-ஐத் தாண்டியுள்ளது.
வடக்கில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரனிதா ஞானராஜா இது குறித்து ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டு மே 15 முதல் இதுவரை மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட 92 நாள் அகழ்வாராய்ச்சியின் மூலம் 454 பேரின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்மணமிட்ட நிலையில் (cross-legged position) புதைக்கப்பட்டிருந்த ஒரு மனித எலும்புக்கூடு பகுதியளவில் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதை முழுமையாக மீட்கும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் அவர் கூறினார்.
மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 38-வது நாளான ஜூலை 20 அன்று, புதிதாக மீட்கப்பட்ட 8 மனித எலும்புக்கூடுகளில் இரண்டு சிறு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று மட்டும் மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





