களுவாஞ்சிகுடி – கல்முனை பிரதான வீதியின் கோட்டைக்கல்லாறு பகுதியில் நேற்று (22) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் வீதியைக் கடப்பதற்காக சில சிறுவர்கள் வீதியோரத்தில் காத்திருந்தபோது, களுவாஞ்சிகுடி நோக்கி வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற கோட்டைக்கல்லாறு பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் கிஷோர் (17) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மற்றும் வீதியோரத்தில் நின்றிருந்த மூன்று சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் முதலில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





