ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான புதிய தடைகளை விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை தொடர்பான அறிவிப்பை அமெரிக்க திறைசேரி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரான் இதனை கடும் விமர்சனத்துடன் எதிர்கொண்டுள்ளது.
புதிய தடைகள் ஈரானை அடிபணியச் செய்யும் அமெரிக்காவின் முயற்சியின் வெளிப்பாடாகும் என்றும், அவை தங்களை வீழ்த்துவதில் வெற்றியளிக்காது என்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.
இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மற்றும் கண்ணியமான தீர்வொன்றை காண அமெரிக்கா முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, நீண்டகால மோதல்கள் மற்றும் சர்வதேச தடைகளால் ஈரானின் பொருளாதாரம் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தொடர்பாக ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக சர்வதேச எண்ணெய் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், உலக சந்தையில் எண்ணெய் விலைகள் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





