எல் நினோவுடன் தொடர்புடைய வறட்சியான காலநிலை காரணமாக இலங்கையின் ஏழு மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள 23 பிரதேச செயலகப் பிரிவுகளில் 25,628 குடும்பங்களைச் சேர்ந்த 81,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 20 பிரதேச செயலகப் பிரிவுகளில் குடிநீர் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 23,048 குடும்பங்களைச் சேர்ந்த 72,153 பேருக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மொனராகலை மாவட்டத்தில் அதிகளவான மக்கள் குடிநீர் விநியோகத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். அங்குள்ள ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளில் 10,264 குடும்பங்களைச் சேர்ந்த 33,023 பேருக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டு பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 9,547 குடும்பங்களில் உள்ள 28,523 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தின் இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட 2,537 குடும்பங்களைச் சேர்ந்த 7,882 பேருக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சியின் தாக்கம் தொடரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





