நேபாளம்–திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட பெரும் திடீர் வெள்ளத்தில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 1,300க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தால் நீர், சேறு, பாறைகள் மற்றும் குப்பைகள் பெரும் வேகத்தில் பள்ளத்தாக்குகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்துள்ளன. இதனால் வீடுகள், வீதிகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
நேபாளத்தில் 826 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களில் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் அடங்குவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திபெத்தில் மேலும் 558 பேர் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களில் இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக பனிக்கட்டி, பாறைகள் மற்றும் குப்பைகள் பள்ளத்தாக்கை நோக்கி அடித்துச் செல்லப்பட்டு இந்த பேரழிவை ஏற்படுத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க ஹெலிகொப்டர்கள் மற்றும் அவசர மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்கள் காரணமாக அணுக முடியாத பகுதிகளிலும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





