22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை முழு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இன்று (01) குறித்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளிட்ட பல சட்டத்தரணிகள் குறித்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்.
எனினும், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, அரசியலமைப்பின் 132(3) உறுப்புரையின் அடிப்படையில் நீதிபதிகள் அமர்வின் எண்ணிக்கை மற்றும் அமைப்பை தீர்மானிக்கும் அதிகாரம் பிரதம நீதியரசருக்கே உள்ளதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
இரு தரப்பினரின் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், சிறிது நேரம் விசாரணையை ஒத்திவைத்த பின்னர், முழு நீதிபதிகள் அமர்வில் விசாரிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது.





