நோர்வூட் பிரதேச செயலகப் பகுதியில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளில், சுமார் ரூ.30 மில்லியன் வரை நிதி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும், நோர்வூட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 20 அரச ஊழியர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் தொடர்புபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக Sunday Observer செய்தியை மேற்கோள்காட்டி Newswire தெரிவித்துள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய அஸ்வெசும கொடுப்பனவுகளைப் பெறுவதற்காக, உயிரிழந்த வயோதிபர்களின் தனிப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நோர்வூட் பகுதியில் ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படும் நிதி இழப்பு சுமார் ரூ.30 மில்லியன் எனவும், தலவாக்கலை பகுதியில் சுமார் ரூ.2 மில்லியன் தொடர்பான முறைகேடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நலன்புரி நன்மைகள் சபையின் கணக்காய்வுப் பிரிவு, நோர்வூட் சம்பவம் தொடர்பான விசாரணையை இரண்டு மாதங்களுக்கும் மேலாக முன்னெடுத்து வருவதாகவும், இறுதி அறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, நோர்வூட் சம்பவத்துடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட 18 அரச ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் நோர்வூட் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த 4 ஊழியர்கள் மற்றும் 6 ஆசிரியர்கள் உட்பட 10 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இரண்டு பெண் அரச ஊழியர்கள் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 50 நாட்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





