உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், செப்டெம்பர் மாத இறுதியில் இலங்கையின் எரிபொருள் விலைகள் மீளாய்வு செய்யப்படலாம் என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த அமைச்சர், வழமையான நடைமுறையின் அடிப்படையில் ஒவ்வொரு மாத இறுதியிலும் உலக சந்தை விலை மற்றும் எரிபொருள் இறக்குமதிக்கான செலவுகளை கருத்திற்கொண்டு உள்நாட்டு எரிபொருள் விலைகள் மீளாய்வு செய்யப்படுவதாக கூறினார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமை காரணமாக உலகளாவிய எரிபொருள் சந்தையில் மீண்டும் விலை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும், இலங்கையில் தற்போதுள்ள எரிபொருள் விலையே ஏற்கனவே கணிசமான உயர்வில் இருப்பதாக அரசாங்கம் கருதுவதாகவும், மேலும் விலை அதிகரிப்பு ஏற்பட்டால் அதனை நுகர்வோரால் தாங்கிக்கொள்ள முடியுமா என்பது குறித்து அரசாங்கத்திற்குள் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சில தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் நட்டத்தை தாங்க முடியாத நிலை காரணமாக குறிப்பாக டீசல் விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதற்குத் தீர்வாக, சட்டரீதியான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, குறிப்பிட்ட குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச விலை வரம்புகளுக்குள் தனியார் நிறுவனங்கள் தமது விலையை நிர்ணயித்து எரிபொருளை விற்பனை செய்ய அனுமதிப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
செப்டெம்பர் மாதத்திற்கான சராசரி உலக சந்தை விலைகள் மற்றும் இறக்குமதி செலவுகள் மதிப்பாய்வு செய்யப்பட்ட பின்னரே அடுத்த எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





