ஆழமான கட்டமைப்பு ரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம்

சமத்துவமின்மையையும் செயற்கை நுண்ணறிவு சவால்களையும் வெற்றிகொள்வதற்கு பாடத்திட்டத் திருத்தங்களுக்கு அப்பால் சென்ற ஆழமான கட்டமைப்பு ரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு பேராயர் துஷாந்த ரொட்ரிகோவின் அழைப்பின்பேரில், நிகழ்த்திய,உரையின் ​போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டில் இலங்கை மற்றும் அதற்கு அப்பாலான கல்வியின் எதிர்காலத்தை வடிவமைத்தல் என்ற தலைப்பில் ஆற்றிய விரிவுரையின் போது, இலங்கையின் பல்மத ஒற்றுமை மற்றும் சமூகப் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தைப் பிரதமர் வலியுறுத்தினார்.

இலங்கையின் கல்விக் கொள்கையின் வரலாற்றுப் பயணத்தைப் பற்றி கருத்துத் தெரிவித்த பிரதமர், 1971 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) அறிக்கையை மேற்கோள்காட்டி, நாட்டில் நிலவும் “திறன்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கு இடையிலான பொருத்தமின்மை மற்றும் அரசத் துறை வேலைவாய்ப்புகளை நோக்கிய வரிசையில் காத்திருக்கும் நிலை ஆகியன பொருளாதார சவால்களுக்கு காரணமாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.

பல தசாப்தங்களாக STEM கல்வி மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்த போதிலும், அதன் மூலம் நாட்டின் கட்டமைப்பு ரீதியிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அச் சீர்திருத்தங்களால் இயலாது போயிருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்

இலவசக் கல்வியின் உண்மையான நோக்கம் தொழிலாளர் படையை உருவாக்குவது மட்டுமல்ல, ஜனநாயக சமூகத்தை முன்னெடுத்துச் செல்லத் தக்க, அரசியல் விழிப்புணர்வும், ஒழுக்கம்மிக்க நிலைப்பாடும் விமர்சன ரீதியான சிந்தனையும் கொண்ட நாட்டு மக்களை உருவாக்குவதாக அது அமைய வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

அத்தோடு கல்வி கட்டமைப்பில் தீர்க்கப்பட வேண்டிய ஐந்து முக்கிய நெருக்கடிகளைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கல்வி நிறுவனங்களுக்கிடையில் நிலவுகின்ற இடைவெளி, சமூகப் பொறுப்புணர்வுமிக்க குடிமக்களை உருவாக்குவதில் காணப்படும் இயலாமை, பெண்களின் கல்விரீதியிலான வெற்றிகள் மற்றும் தொழிலாளர் படையில் இணைந்து கொள்வதில் காணப்படும் இடைவெளி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்ப மாற்றங்களைத் தழுவிக்கொள்ள வேண்டியதன் அவசியம் மற்றும் கல்வியை வெறுமனே சான்றிதழ்களைப் பெறுவதற்கான கருவியாக மாத்திரம் கருதும் நிலை.

செயற்கை நுண்ணறிவை எதிர்கொள்ள வேண்டுமாயின் டிஜிட்டல் கல்வியறிவையும் இணையவழிப் பாதுகாப்பையும் பலப்படுத்துவது அவசியம் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

கல்வி என்பது உலகைப் புரிந்து அதை மாற்றியமைக்கும் ஒரு செயற்பாடாகும் என்றும், ஆசிரியர் தொழிலை மீண்டும் சமூக மரியாதைக்குரிய ஒரு உயரிய தொழிலாக நிலைநிறுத்த வேண்டுமெனவும், கல்விச் சீர்திருத்தங்களின் இறுதி இலக்கு சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய தலைவர்களை உருவாக்குவதாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore