2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் எரிபொருள் நுகர்வு மற்றும் எரிபொருள் இறக்குமதிச் செலவுகள் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (02) வெளிப்படுத்தியுள்ளார்.
உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப, இறக்குமதிச் செலவுகள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் அங்கு குறிப்பிட்டார்.
இதன்படி, ஜனவரி மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்காக அரசாங்கம் 186 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ள போதிலும், மே மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்காக அரசாங்கத்திற்கு 521 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட நேரிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, “எமது நுகர்வை எடுத்துக் கொண்டால், ஜனவரி மாதத்தில் 4,538 கிலோ லீற்றர் ஓட்டோ டீசலும், பெப்ரவரியில் 4,846, மார்ச்சில் 6,130, ஏப்ரலில் 3,988, மே மாதத்தில் 3,701 கிலோ லீற்றரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஜனவரி மாதத்திலிருந்து மே மாதம் வரையான காலப்பகுதியில் எமது நுகர்வு 82% மட்டத்திற்கு குறைவடைந்துள்ளது.
மொத்த டீசல் அளவு ஜனவரி மாதத்தில் 5,944 கிலோ லீற்றராகவும், மே மாதத்தில் 5,394 கிலோ லீற்றராகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி எமது பயன்பாடு 91% ஆகக் காணப்படுகிறது.
பெற்ரோல் 92 ஜனவரி மாதத்தில் 5,565 கிலோ லீற்றர் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், மே மாதத்தில் 4,849 கிலோ லீற்றர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 87% அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்புடன், மாதமொன்றுக்கு எரிபொருள் இறக்குமதிக்காக எமக்கு ஏற்படும் செலவு அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தில் 186 மில்லியன் டொலர், பெப்ரவரி மாதத்தில் 97 மில்லியன் டொலர், மார்ச்சில் 95 மில்லியன் டொலர், ஏப்ரல் மாதத்தில் 316 மில்லியன் டொலர், மே மாதத்தில் 521 மில்லியன் டொலர் ஆகும். ஜனவரி மாதத்திலிருந்து மே மாதமாகும்போது நுகர்வு 80%-90% க்கு இடையில் காணப்பட்ட போதிலும், செலவீனம் 186 மில்லியன் டொலரிலிருந்து 521 மில்லியன் டொலர் வரை உயர்ந்துள்ளது. உலக சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப விலையைச் சமநிலைப்படுத்தவே நாம் முயற்சித்து வருகிறோம்.” என்றார்.





