சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் தற்போதைய நிலையில் தொடர்ந்தாலோ அல்லது மேலும் குறைந்தாலோ, இலங்கையின் எரிபொருள் இறக்குமதி செலவு ஜூலை மாதத்திற்குள் கணிசமாக குறையும் என சிலோன் பெற்றோலியக் கூட்டுத்தாபன (CPC) தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இறக்குமதி செலவுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களில் சர்வதேச சந்தை விலை உயர்வு மற்றும் மின்சார உற்பத்திக்காக கூடுதல் எரிபொருள் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை காரணமாக டொலர் செலவினம் அதிகரித்ததாக அவர் கூறினார்.
“சாதாரணமாக CPC மாதமொன்றுக்கு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட்டது. ஆனால், ஏப்ரல் மாதத்தில் அந்த தொகை 522 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்தது. கடந்த மாதமே எரிபொருள் கொள்வனவுக்காக அதிகளவு டொலர்கள் நாட்டிலிருந்து வெளியேறிய மாதமாக பதிவாகியுள்ளது” என அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 11 எரிபொருள் கப்பல்கள் உயர்ந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், மின்சார உற்பத்திக்காக கூடுதலாக டீசல் கப்பல் ஒன்றும் அதிக விலைக்கு வாங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், தற்போது எரிபொருள் இறக்குமதி செலவை கணிசமாக குறைக்க CPC நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
“522 மில்லியன் டொலராக உயர்ந்திருந்த செலவு, இந்த மாதம் 318 மில்லியன் டொலராக குறைந்துள்ளது. ஜூலை மாதத்திற்குள் இதை 198 மில்லியன் டொலர் வரை குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தேவையான கச்சா எண்ணெய் முழுமையாக கிடைத்துள்ளதால் இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், உலக சந்தையில் டீசல் விலைகள் படிப்படியாக குறைந்து வருவதாகவும், இந்த நிலை தொடருமானால் எரிபொருள் இறக்குமதி செலவுகளை சிரமமின்றி நிர்வகிக்க முடியும் எனவும் CPC தலைவர் நம்பிக்கை வெளியிட்டார்.
எனினும், ஜூலைக்கு பின்னர் சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் உலக அரசியல் பதற்றங்களின் அடிப்படையில் நிலைமைகள் மாறக்கூடும் என்றும், அவ்வாறான சூழலில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க வேண்டி வரலாம் என்றும் அவர் எச்சரித்தார்.





