பெண் பிசியோதெரபிஸ்ட் மரணம்: சந்தேகநபரை தீவிரமாக தேடும் பொலிஸார்

அம்பாறை பொது வைத்தியசாலையின் பெண் பௌதீக சிகிச்சை நிபுணர் (பிசியோதெரபிஸ்ட்) கழுத்து இறுகி மரணமடைந்திருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, இக்கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் அவரது காதலனைத் தேடுவதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதுடன், இதுவரை சந்தேகநபரைக் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.

இருப்பினும், சந்தேகநபர் தொடர்பான பல தகவல்களை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

அதன்படி, இந்த சந்தேகநபர் குறித்த யுவதிக்கு முன்னால் ‘தினேத் திஸாநாயக்க’ என்ற பெயரில் தோற்றமளித்த போதிலும், அவரது தேசிய அடையாள அட்டையில் உள்ள உண்மையான பெயர் ‘ஜயசுந்தர முதியான்சேலாகே சம்பிக ஸ்ரியான் ஜயசுந்தர’ என்பதும், அவர் நாரம்மல பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சந்தேகநபர் போலி தலைமுடி (Wig) அணிந்து தனது உண்மையான தோற்றத்தை மறைத்து வாழ்ந்து வந்துள்ளதுடன், இவருக்கு பல யுவதிகளுடன் தொடர்புகள் இருந்துள்ளதாகவும், பெண்களை ஏமாற்றி பணம் பறித்த பல சம்பவங்களுடன் இவர் தொடர்புபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகநபருக்கு எதிராக கம்பஹா, புதுக்கடை, திஸ்ஸமஹாராமய உள்ளிட்ட நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், பெண்களை ஏமாற்றி பணம் பறித்தமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கும் இவருக்கு எதிராகப் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான இந்த சந்தேகநபரின் குற்றச் செயல்களுக்கு அவரது மனைவியும் ஆதரவளித்து உதவிகளை வழங்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், இந்த சந்தேகநபர் உண்மையிலேயே ஒரு மென்பொருள் பொறியியலாளரா? (Software Engineer) என்பதும் சந்தேகத்திற்குரியது எனவும், யுவதிகளை ஏமாற்றுவதற்காகவே அவர் அவ்வாறு கூறியிருக்கலாம் எனவும் விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பில், நுவரெலியா பொலிஸார் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட வேண்டியுள்ள, உயிரிழந்த யுவதியின் காதலன் எனக்கூறப்படும் நபருக்கு எதிராக நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடையை விதித்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த 17ஆம் திகதி பிற்பகல் தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிற்குள் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டதுடன், அவர் அம்பாறை வைத்தியசாலையில் பணிபுரிந்த பௌதீக சிகிச்சை நிபுணர் என்பது பின்னர் தெரியவந்தது.

குறித்த யுவதியின் காதலன் எனக்கூறப்படும் நபர், இதற்கு முந்தைய நாள் யுவதியின் உடலை நுவரெலியா பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் இருந்து வெளியே கொண்டு வரும் காட்சிகள் சிசிடிவி கெமராவில் பதிவாகியிருந்தது.

இதேவேளை, வெலிகம பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த யுவதியின் சடலம் மீதான இறுதிச் சடங்குகள் இன்று இடம்பெற்றன.

சந்தேகநபர் தொடர்பாக தற்போது நுவரெலியா பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டாரவின் நேரடி மேற்பார்வையின் கீழ் மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore