நீதியரசர்களின் ஓய்வூதிய வயதெல்லையை தன்னிச்சையாக மாற்றக்கூடாது

மேன்முறையீட்டு நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வூதிய வயதெல்லையை தன்னிச்சையாக மாற்றக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு மாற்றம் இந்த நேரத்தில் அவசியமற்றது அல்லது பொருத்தமற்றது என்பதே தமது சங்கத்தின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முறையே 63 மற்றும் 65 ஆகக் காணப்படும் மேன்முறையீட்டு நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வூதிய வயதெல்லையை அதிகரிப்பதற்காக அரசியலமைப்பு திருத்தமொன்றை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக இன்று (04) நடைபெற்ற பொது கலந்துரையாடல் மன்றத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், சட்டத்தரணி ரஜீவ் அமரசூரியவின் கையொப்பத்துடன் கூடிய கடிதமொன்று கடந்த நாட்களின்போது ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வூதிய வயதெல்லையை அதிகரிக்கும் ஆயத்தங்கள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் கொழும்பில் விசேட பொது கலந்துரையாடல் மன்றமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் அச்சங்கத்தின் உறுப்பினர்கள் மட்டுமன்றி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சர்வஜன அதிகாரத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட அரசியல்வாதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore