சீனாவின் நாஞ்சிங் நகரின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அதிகாரி ஒருவருக்கு, 325 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 2.21 பில்லியன் யுவான்) பெறுமதியான லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யாங் யூலின் என்ற குறித்த அதிகாரி, லஞ்சம் பெறுதல், அரச நிதியை முறைகேடாக பயன்படுத்துதல், அதிகார துஷ்பிரயோகம், பண மோசடி மற்றும் லஞ்சம் வழங்குதல் உள்ளிட்ட பல குற்றங்களில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ளார்.
1993 முதல் 2023 வரையான மூன்று தசாப்த காலப்பகுதியில், திட்ட அனுமதிகள், வர்த்தக நடவடிக்கைகள், காணி ஒதுக்கீடுகள் மற்றும் நிதி உதவிகள் போன்றவற்றில் சலுகைகள் வழங்குவதற்காக அவர் இந்த லஞ்சங்களை பெற்றதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தலைமையிலான நீண்டகால ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக யாங் யூலின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் தனது இறுதி அறிக்கையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது தனிப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுவதுடன், பெற்ற லஞ்சத் தொகையை முழுமையாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (AP)





