கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேவண்டன் தோட்டத்தில் 48 குடும்பங்களைச் சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த டித்வாவின் போது இத்தோட்டத்திற்கான பிரதான பாதை முழுமையாகச் சேதமடைந்தது. இதன் காரணமாக, இத்தோட்டத்தில் உள்ள பாடசாலையின் செயல்பாடுகளும் தற்போது முழுமையாக முடங்கியுள்ளன.
டித்வாவின் போது அருகில் உள்ள பாடசாலைகளில் தற்காலிகமாகத் தங்கியிருந்த மக்கள், தற்போது மீண்டும் தங்களது சொந்த இடமான வேவண்டன் தோட்டத்திற்கே திரும்பி வசித்து வருகின்றனர்.
தங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவதாகக் கொத்மலை பிரதேச செயலகம் உறுதியளித்திருந்தது. ஆனால், அனர்த்தம் நடந்து 9 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், தங்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதியும் செய்துகொடுக்கப்படவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தற்போது இத்தோட்டத்திற்குச் செல்லும் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள பிரதான பாதையை உடனடியாகப் புனரமைத்துத் தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் பதாதைகளை ஏந்தியவாறு, கோஷங்களை எழுப்பியபடி தோட்டத்திலிருந்து நடைபவனியாகப் புறப்பட்ட மக்கள், கண்டி – நுவரெலியா பிரதான பாதையை வந்தடைந்தனர். அங்கிருந்து கெரண்டி எல்ல பகுதியில் ஒன்று திரண்டு தங்களது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
-கண்டி நிருபர் ராஜ்-





