சாய்ந்தமருது அபிவிருத்தி திட்டங்கள் புறக்கணிப்பு: இருளில் மூழ்கும் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா!

சாய்ந்தமருது பிரதேசத்தில் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா மாத்திரமன்றி, ஏனைய அபிவிருத்தி திட்டங்களும் தொடர்ச்சியாக அரசியல்வாதிகளினால் புறக்கணிக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

பொது மக்கள் மாலையில் குடும்பத்துடன் வந்து பொழுதுபோக்குவதற்காக சாய்ந்தமருதில் அமைந்துள்ள ஒரேயொரு முக்கிய இடமாக இந்த கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா காணப்படுகின்றது.

‘கிளீன் ஸ்ரீ லங்கா’ (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இப்பூங்கா, கடந்த 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களினால் இது திறந்து வைக்கப்பட்டு, மாநகர சபையிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இடம், தற்போது பராமரிப்பின்றி அழிந்து வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பூங்காவில் மின்விளக்குகள் எரியாததால் இரவு வேளைகளில் இவ்விடம் முற்றிலும் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது.

முறையாக சுத்தம் செய்யப்படாததால் பூங்கா முழுவதும் குப்பைகள் நிறைந்து துர்நாற்றம் வீசும் சூழலாக மாறியுள்ளது.

இந்த அவல நிலை காரணமாக, பூங்காவிற்கு வருகை தரும் பொதுமக்களின் எண்ணிக்கை தற்போது சடுதியாகக் குறைந்து வருகின்றது.

இதற்குக் காரணம் என்ன? இதன் பின்னணியில் இருப்பது யார்? என அங்கு வரும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அத்துடன், இப்பூங்காவை மேலும் சிறப்பான முறையில் பராமரித்து மக்களுக்கு வழங்க உரிய அதிகாரிகள் தயங்குவது ஏன் என்றும் அவர்கள் வினவுகின்றனர்.

குறிப்பிட்ட இந்த சாய்ந்தமருது பிரதேசமானது, பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் பூர்வீக ஊர் என்பது எல்லோரும் அறிந்த உண்மையாகும். தனது சொந்த ஊரிலேயே, தனது கரங்களால் திறந்து வைக்கப்பட்ட ஒரு திட்டம் இவ்வாறு பாழடைந்து போவது குறித்து மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

எனவே, இந்த விடயத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், மாநகர சபை அதிகாரிகள் மற்றும் உரிய பொறுப்புதாரர்கள் உடனடியாகக் கரிசனை கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். உடன் அமுலுக்கு வரும் வகையில், இப்பூங்காவில் காணப்படும் மின்சாரப் பிரச்சினை மற்றும் தூய்மையீனங்களை நிவர்த்தி செய்து, இதனை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு உகந்த இடமாக மாற்றித் தருமாறு சாய்ந்தமருது பொதுமக்கள் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore