இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் லோர்ட்ஸ் மைதானத்தில் சதமடித்து சரித்திரம் படைத்த ரோகித் சர்மா, தமது ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில் இருந்த சூழலில், கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று (19) நடைபெற்றது.
கடைசி நேரத்தில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் ஓட்டங்களை வாரி வழங்க, 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 387 ஓட்டங்களைப் சேர்த்தது.
கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி வலுவான தொடக்கத்தை பெற்றாலும், இமாலய இலக்கை எட்ட முடியாமல் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தொடரை இழந்தது.
இருப்பினும், ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரலாற்று சிறப்புமிக்க சதத்தை விளாசி, தமது ஓய்வு தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தலைவர் கில் மற்றும் முன்னாள் தலைவர் ரோகித் சர்மா ஆகியோர் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 147 ஓட்டங்களை சேர்க்க, கில் 77 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய ரோகித் சர்மா, அரைசதத்தை பூர்த்தி செய்த பிறகு அதிரடியாக ஓட்டங்களை குவிக்க தொடங்கினார்.
இதன் மூலம் தனது 34வது சதத்தை பூர்த்தி செய்ததோடு, இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடிக்க தொடங்கினார்.
இதனால் அணியின் ஓட்டங்கள் மளமளவென உயர்ந்தது. ஒருகட்டத்தில் தசைபிடிப்பால் அவதிப்பட்ட அவர், இனி ஓட முடியாது என உணர்ந்த ரோகித், பவுண்டரி மற்றும் சிக்சர்களை மட்டுமே குறிவைத்து அடித்தார்.
அதன் விளைவாக 110 பந்துகளில் 138 ஓட்டங்களை எடுத்து இருந்தபோது ஆட்டமிழந்தார்.
பின்னர் விராட் கோலியை தவிர வேறு எந்தவொரு வீரரும் நேற்றைய போட்டியில் சோபிக்கவில்லை.
இதன் விளைவாக லோர்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற முக்கியத்துவமான பெருமையை ரோகித் சர்மா தனதாக்கியுள்ளார்.
கடந்த 1975ம் ஆண்டு முதல் இந்திய அணி பல்வேறு போட்டிகளில் இங்கு களமிறங்கினாலும், 51 ஆண்டுகளில் அங்கு சதமடித்த முதல் இந்திய வீரரானார் ரோகித் சர்மா.
முன்னதாக 2004ம் ஆண்டு கங்குலி அடித்த 90 ஓட்டங்களே அதிகபட்சமாக இருந்தது.
இதுபோக இந்திய அணிக்காக அதிக வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையையும் 39 வயது 80 நாட்களில் ரோகித் படைத்துள்ளார்.
முன்னதாக 38 வயது 327 நாட்களில் சதம் அடித்து சச்சின் இந்த சாதனையை தனது வசம் வைத்து இருந்தார்.
இதன் மூலம், மோசமான ஃபார்மில் இருப்பதால் லோர்ட்ஸ் போட்டியுடன் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என கூறப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
2027 உலகக் கிண்ணத்தில் விளையாட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்கிறார் என்பதையும் உணர முடிகிறது.
இந்நிலையில், போட்டிக்குப் பிறகு பேசிய தலைவர் கில்லிடம், ரோகித் சர்மாவின் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, அவர் எங்களிடம் எதுவும் கூறவில்லை. இதுபற்றி ஊடகங்களில் எல்லாம் வெளியாகிவிட்டது என்று நினைக்கிறேன், ஆனால் அணிக்குள் அதுபோல எந்த விவாதமும் நடக்கவில்லை என கில் தெரிவித்துள்ளார்.
இதனால் ரோகித் சர்மா தொடர்ந்து விளையாடுவது உறுதியாகியுள்ளது.





