ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாக கூறப்படும் ரூ.150 மில்லியன் பெறுமதியான நான்கு சொத்துக்களை பொலிஸார் முடக்கியுள்ளனர்.
ரத்கம, தேவிநிகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்து காலி நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்ததையடுத்து, மேலதிக விசாரணைகள் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
விசாரணைகளில், சந்தேகநபரும் அவரது மனைவியின் சகோதரரும் சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தைப் பயன்படுத்தி, சந்தேகநபரின் மாமியார் பெயரில் சொத்துக்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முடக்கப்பட்ட சொத்துக்களின் விபரம்:
- 13.72 பேர்ச் காணி மற்றும் மூன்று மாடிக் கட்டிடம் – ரூ.60 மில்லியன் பெறுமதி
- 9.10 பேர்ச் காணி மற்றும் நிர்மாணம் நிறைவடையாத மூன்று மாடிக் கட்டிடம் – ரூ.45 மில்லியன் பெறுமதி
- 12.33 பேர்ச் காணி – ரூ.25 மில்லியன் பெறுமதி
- 9.88 பேர்ச் காணி மற்றும் ஒரு மாடி வீடு – ரூ.20 மில்லியன் பெறுமதி
இந்த நான்கு சொத்துக்களின் மொத்த பெறுமதி சுமார் ரூ.150 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பணச் சலவை தடுப்பு சட்டத்தின் கீழ், 2026 ஜூலை 23 ஆம் திகதி முதல் ஏழு நாட்களுக்கு குறித்த சொத்துக்களை முடக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முன்னெடுத்து வருகின்றது.





