நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீட்டிப்பு அடங்கிய புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அங்கீகாரம்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீட்டிப்பு அடங்கிய புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

தெரண தொலைக்காட்சியில் ஔிபரப்பான 360 நடப்பு விவகாரங்கள் மற்றும் அரசியல் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இதனைக் குறிப்பிட்டார்.

இதற்கமைய, குறித்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 2 வருடங்களால் உயர்த்துதல், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றங்களின் நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் தலைமை நீதிபதியின் பதவிக்காலத்தை 6 ஆண்டுகளுக்குக் மட்டுப்படுத்துதல் ஆகிய முன்மொழிவுகள் இச்சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர், அது தொடர்பாக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார:

“இன்று, இதைத்தான் நாம் முன்னிலைப்படுத்த வேண்டும். அரசியலமைப்புத் திருத்தம் மட்டுமல்ல. ஏனெனில் இந்தத் திருத்தத்தின் மூலம் நாங்கள் பல விடயங்களைச் செய்கிறோம். ஒன்று, அனைத்து நீதிபதிகளின் வயது வரம்பை உயர்த்துவது. நீதிமன்ற உறுப்பினர்களின் வயதை உயர்த்தும் போதே அரசியலமைப்புத் திருத்தம் வருகிறது. மற்றொன்றிற்கு நாங்கள் நீதிமன்ற அமைப்புச் சட்டத்தையே திருத்தியுள்ளோம்.

இதுதவிர, நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துகிறோம். மேல் நீதிமன்றத்திலும் எண்ணிக்கையை உயர்த்த அந்தத் திருத்தத்திலேயே சேர்த்துள்ளோம். நாங்கள் பேசாத மற்றொரு விடயம் என்னவென்றால், தலைமை நீதிபதியாகும் போது அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் என்ற காலவரையறைக்கு உட்படுத்த வேண்டும் என்று இங்கு யோசித்தோம். உண்மையில் இந்த விடயம், 2016 ஆம் ஆண்டு சட்டத்தரணிகள் சங்கம் செய்த முன்மொழிவுகளின் ஒரு பகுதியாகவே நாங்கள் எடுத்துக்கொண்டோம். அது ஆறு ஆண்டுகளுக்குக் மட்டுப்படுத்தப்படும்.

அதாவது, ஒன்று 67 வயது, அல்லது 6 ஆண்டுகள் நிறைவு பெறுவது என்ற திருத்தங்களை இன்று கொண்டு வந்தோம். இன்று அதை அமைச்சரவையில் சமர்ப்பித்து, வர்த்தமானிப் பத்திரிகையில் மூன்று மொழிகளிலும் சமர்ப்பித்து, வர்த்தமானியில் வெளியிடுவதற்கே அனுமதி கோருகிறோம். வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பிறகு, சுமார் ஒரு வாரம் அது வர்த்தமானியில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதன் பிறகு சுமார் இரண்டு வாரங்கள் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இருக்க வேண்டும். சுமார் மூன்று வார காலம் உள்ளது.

அந்தக் காலப்பகுதியில் இதற்கு சவால் விடுப்பதாக இருந்தால், இதில் ஏதேனும் தவறு, பிரச்சினை இருந்தால், பொது விவாதத்தை ஏற்படுத்த முடியும். எனவே பெரும்பாலான நேரங்களில் இதற்கெதிராக வழக்குத் தொடரப்படும் என நினைக்கிறேன். அப்படி நடந்தால், அந்த மூன்று மாதங்கள் மேலும் ஒரு மாதம் வரை நீடிக்கலாம், ஒன்றரை மாதங்கள் கூடச் செல்லலாம். ஏனெனில் நீதிமன்றத்தால் ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட வேண்டும்.” என்றார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore