இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் உள்ள காயங்கேணி கடல் சரணாலயம் மற்றும் அதனை ஒட்டிய பாசிக்குடா கடலோரப் பகுதியில், கடற்பவளப் பாறைகளின் தற்போதைய நிலையை மதிப்பிடும் விரிவான ஆய்வொன்றை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கடல் பிரிவு ஆரம்பித்துள்ளது.
இந்த ஆய்வின் மூலம்,
பாதுகாக்கப்பட்ட மற்றும் பாதுகாக்கப்படாத கடற்பகுதிகளில் உள்ள பவளப் பாறைகளின் ஆரோக்கிய நிலை மதிப்பிடப்படவுள்ளது.
இயற்கை மற்றும் மனித செயற்பாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் அடையாளம் காணப்படவுள்ளன.
எதிர்கால பாதுகாப்பு மற்றும் மீளுருவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான விஞ்ஞானத் தரவுகள் சேகரிக்கப்படவுள்ளன.
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்ததாவது, விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பவளங்கள் பாதுகாக்கப்படும் உயிரினங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.
நுண்ணிய சூக்சாந்தெல்லே (Zooxanthellae) என்ற பாசிகளுடன் இணைந்து வாழும் பவளங்கள், உலகின் மிகச் செழுமையான கடல் உயிரியல் சூழலமைப்புகளில் ஒன்றை உருவாக்குகின்றன.
மேலும், பவளப் பாறைகள்,
கடல் உயிரினங்களுக்கு வாழிடம், இனப்பெருக்கம் மற்றும் உணவுத் தளங்களை வழங்குகின்றன.
கடற்கரைகளை அலைகள் மற்றும் கரையரிப்பிலிருந்து பாதுகாக்கின்றன.
கடலோர மக்களின் மீன்பிடித் தொழில் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்கின்றன.
சுற்றுலாவை மேம்படுத்தி உள்ளூர் பொருளாதாரத்திற்கும் பங்களிக்கின்றன.
இந்த ஆய்வின் முடிவுகள், தொடர்புடைய தரப்புகளுடன் இணைந்து எதிர்கால பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவத் திட்டங்களை வகுப்பதற்கான அடிப்படைத் தகவல்களாக பயன்படுத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சுற்றுலா மேம்பாட்டையும் சமநிலைப்படுத்தும் நிலையான சுற்றுலா வாய்ப்புகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





