இலங்கையின் உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், நாடு முழுவதிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட 19 பால் பண்ணையாளர்களுக்கு இந்தியாவில் சிறப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இந்தியாவுக்கு பயிற்சிக்காக செல்லவுள்ள பால் பண்ணையாளர்கள், நேற்று (07) விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னவை சந்தித்துள்ளனர்.
இந்திய அரசாங்கத்தின் முழுமையான நிதியுதவியுடன் இடம்பெறும் இப்பயிற்சி, எதிர்வரும் ஆகஸ்ட் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் பயிற்சி இந்தியாவின் குஜராத் மாநிலம் ஆனந்தில் அமைந்துள்ள தேசிய பால் அபிவிருத்தி சபையில் (NDDB) நடைபெறவுள்ளதுடன், உலகின் முன்னணி பால் கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்றான அமுல் (Amul – GCMMF) நிறுவனத்தின் செயற்பாடுகளை நேரடியாக பார்வையிடும் வாய்ப்பும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நவீன தொழில்நுட்பங்கள், பால் பண்ணை முகாமைத்துவம், பால் உற்பத்தி மதிப்புச் சங்கிலி அபிவிருத்தி, அரசாங்க ஆதரவு பொறிமுறைகள் மற்றும் கால்நடை போசாக்கு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
நாட்டின் அனைத்து பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கும் வகையிலும் பால் பண்ணையாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இத்திட்டத்தின் அடுத்த கட்டத்தில் இலங்கையின் மேலும் பல பால் பண்ணையாளர்கள் குழுக்களுக்கு இதேபோன்ற பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் எதிர்காலத்தில் பயிற்சி பெறும் பால் பண்ணையாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





