இலங்கையில் வாகனங்களுக்கான இறக்குமதி வரியில் விதிக்கப்பட்டுள்ள 50% கூடுதல் கட்டணம் (Surcharge) டிசம்பர் 31, 2026 வரை நீடிக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் காலங்களில் வாகனங்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) தெரிவித்துள்ளது.
இந்த கூடுதல் கட்டணம் ஆகஸ்ட் 15ஆம் திகதியுடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சில பிரபலமான வாகனங்களின் விலைகள் பின்வருமாறு அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது:
🔹 Suzuki Wagon R – சுமார் ரூ. 500,000 அதிகரிப்பு
🔹 Toyota Raize – சுமார் ரூ. 1 மில்லியன் அதிகரிப்பு
🔹 Honda Vezel – ரூ. 1.5 – 2 மில்லியன் அதிகரிப்பு
🔹 Toyota Prado – சுமார் ரூ. 3 மில்லியன் அதிகரிப்பு
🔹 Toyota Land Cruiser – சுமார் ரூ. 5 மில்லியன் அதிகரிப்பு
🔹 Double Cab – ரூ. 2 – 2.5 மில்லியன் அதிகரிப்பு
VIASL தலைவர் பிரசாத் மானகே தெரிவிக்கையில், தற்போது ஷோரூம்களில் உள்ள பெரும்பாலான வாகனங்கள் மே 15ஆம் திகதிக்கு முன்னர் திறக்கப்பட்ட கடன் கடிதங்கள் (LC) மூலம் இறக்குமதி செய்யப்பட்டவை என்பதால், அவற்றுக்கு இந்த கூடுதல் கட்டணம் பொருந்தாது என குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மே 15ஆம் திகதிக்குப் பின்னர் திறக்கப்பட்ட LCக்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அதிகரிக்கப்பட்ட வரி விதிக்கப்படுவதால், அவற்றின் விலைகள் கணிசமாக உயரக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சுமார் 90% வாகனங்கள் கூடுதல் கட்டணம் பொருந்தாத LCக்களின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது கூடுதல் வரி விதிக்கப்படும் வாகனங்களை சுங்கத்திலிருந்து விடுவிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக Surcharge முறையை மாற்றுவதற்குப் பதிலாக, வரி கொள்கையை மறுபரிசீலனை செய்தல், LCக்களை கட்டுப்படுத்துதல் மற்றும் நிலையான விகிதங்களை நடைமுறைப்படுத்துதல் போன்ற மாற்று நடவடிக்கைகள் மூலம் வாகனச் சந்தையை நிலைப்படுத்த முடியும் எனவும் VIASL தலைவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான கூடுதல் கட்டணங்கள் வாகனச் சந்தையில் பெரும் விலை ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





