வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் 73 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சர்வதேச ரெட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த 73 சந்தேகநபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டார்.
மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் சுமார் 100 பேர்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
பாதாள உலகக் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு சர்வதேச ரீதியில் வலுவான ஒத்துழைப்பு கிடைத்து வருவதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய நடவடிக்கைகளை நிறுத்துமாறு வெளிநாடுகளில் இருந்து எந்தவொரு அழுத்தமோ அச்சுறுத்தலோ விடுக்கப்படவில்லை எனவும், மாறாக நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு கோரிக்கைகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
இந்நடவடிக்கைகளால் குற்றவியல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு நிதியுதவி, முதலீடு அல்லது வேறு வகையில் ஆதரவளித்தவர்கள் கவலையடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், தன்னைப் பற்றி சில அரசியல்வாதிகள் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு தாம் அஞ்சவில்லை எனத் தெரிவித்த பொலிஸ் மா அதிபர், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.





