பொதுப் பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பேருந்து தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்தி, பேருந்துகளின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்து தரிப்பிடங்களில் பிற வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகள் வீதியிலேயே நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்படுவதுடன், வாகன நெரிசல் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தும் பயணிகளையும் ஏற்றிச் செல்லக்கூடிய பேருந்துகளின் சேவை அதிகரித்துள்ள நிலையில், பேருந்து தரிப்பிடங்கள் தடையின்றி இருப்பது மிகவும் அவசியமானதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பேருந்து தரிப்பிடங்கள் பிற வாகனங்களால் மறைக்கப்படும் போது, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பயணிகள் பேருந்தில் ஏறும்போதும் இறங்கும்போதும் ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அரச வர்த்தமானி அறிவித்தலின்படி, பேருந்து தரிப்பிடத்தை அணுகும் பகுதியில் இருந்து 30 மீற்றர் வரையிலும், தரிப்பிடத்தைத் தாண்டிய பகுதியில் 15 மீற்றர் வரையிலும் வாகனங்களை நிறுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
பேருந்துகளுக்கென தனியான Bus Bay அமைக்கப்பட்டுள்ள இடங்களில், தரிப்பிடத்தை அணுகும் பகுதியில் 15 மீற்றர் வரையிலும், வெளியேறும் பகுதியில் 10 மீற்றர் வரையிலும் பிற வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பேருந்துகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு பயணிகள் ஏறி இறங்குவதற்கும், இந்த சட்டங்களை கடுமையாக அமுல்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சாரதிகள் தங்களது வாகனங்களை முறையாக நிறுத்துவதுடன், பேருந்து தரிப்பிடங்களை பேருந்துகளுக்காக தடையின்றி வைத்திருக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
(Newswire)





