ஆசிரியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்கப்படாது என வெளியான தகவலை பிரதமர் ஹரிணி அமரசூரிய முற்றிலும் நிராகரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பிரதமர், ஆசிரியர்களின் சம்பளம் திட்டமிட்டபடி உரிய நேரத்தில் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
இதேவேளை, பாடசாலை அதிபர்கள் நியமன முறையை மேலும் முறையானதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
நீண்ட காலமாக அதிபர் நியமனங்கள் முறையான நடைமுறையின்றி இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பொதுச் சேவை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி தற்போதைய நியமன முறையை மறுபரிசீலனை செய்து தேவையான மாற்றங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதிபர்கள் தெரிவு செய்யப்படும்போது கல்வித் தகைமைகள் மட்டுமன்றி, செயல்திறன் உள்ளிட்ட ஏனைய காரணிகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என அரசாங்கம் கருதுவதாகவும் பிரதமர் கூறினார்.
மேலும், அதிபர்களின் திறன் மேம்பாட்டுக்காக கல்வி அமைச்சு தற்போது பல பயிற்சி திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், 2027ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவனம் ஊடாக மேலும் கட்டமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.





