ஹோர்முஸ் நீரிணையை “அமெரிக்கப் பிரதேசம்” என தான் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தென் கரோலினாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய ட்ரம்ப், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடரும் நிலையில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை ஈரான் மற்றும் ஓமன் இடையே அமைந்துள்ளதுடன், உலகின் கடல் வழி எண்ணெய் விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீர்வழியாகச் செல்கிறது.
அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) வெளியிட்ட தகவலின்படி, முற்றுகையை கடைப்பிடிக்கச் செய்வதற்காக அமெரிக்கப் படைகள் இதுவரை 68 வர்த்தகக் கப்பல்களை திசைதிருப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை. மோதல் ஆறு மாதங்களை நெருங்கியுள்ள நிலையில், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை பாதிக்கும் வகையில் ஹோர்முஸ் நீரிணைக்கான அணுகலை கட்டுப்படுத்த அமெரிக்கா முயன்று வருகிறது.
கடந்த வாரமும் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கப் பிரதேசமாக அறிவிப்பது குறித்து ட்ரம்ப் கருத்து தெரிவித்திருந்தார். பின்னர் சமூக ஊடகங்களில் அந்த நீர்வழியை “புதிய அமெரிக்கப் பிரதேசம்” எனக் குறிப்பிடும் வரைபடத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் Kazem Gharibabadi, ட்ரம்பின் கருத்துகளை “மாயை” (delusions) என நிராகரித்துள்ளார்.
(The Guardian / Newswire)





