அவிசாவெல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, போலி SLS தரச் சான்று அடையாளம் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 8,500 குடிநீர் போத்தல்கள் மற்றும் கொள்கலன்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 21ஆம் திகதி, நுகர்வோர் விவகார அதிகார சபையின் போட்டி மேம்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
அமித்திரிகல – ருவன்வெல்ல பகுதியில் உள்ள தொழிற்சாலையொன்றில் தயாரிக்கப்பட்ட இந்த குடிநீர், விநியோகத்திற்கு முன்னதாக அவிசாவெல்ல பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
500 மில்லிலீற்றர் முதல் 19 லீற்றர் வரையிலான பல்வேறு அளவுகளில் காணப்பட்ட கொள்கலன்களில் போலியான SLS அடையாளமும் Certificate No. 894 எனும் சான்றிதழ் இலக்கமும் பயன்படுத்தப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பொருட்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதற்கு முன்னரே அதிகாரிகளால் முழுமையாக முடக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்காகக் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
போத்தல்கள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்யும் போது SLS சான்று மற்றும் தயாரிப்பு விபரங்களை சரிபார்க்குமாறும், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் தொடர்பில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





