மாற்றுத்திறனாளி குழந்தைகளின் உடல் மற்றும் உள நலனை உறுதி செய்வதற்காக உள்ளடக்கிய கல்வியை வலுப்படுத்துவதுடன், சிகிச்சையாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கான பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
வெனிவெல்கொலவில் அமைந்துள்ள தேசிய சிறப்பு மற்றும் உள்ளடக்கிய கல்வி நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர், மாற்றுத்திறனாளி குழந்தைகள் அதிக பாதுகாப்பு தேவைப்படும் குழுவாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தினருக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து, குழந்தைகளை எதிர்மறையான தாக்கங்களிலிருந்து பாதுகாப்பதுடன் அவர்களின் ஒட்டுமொத்த நலனையும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
2019ஆம் ஆண்டு நிறுவப்பட்ட குறித்த நிறுவனத்தை, உள்ளடக்கிய கல்வியின் நோக்கங்களுக்கு ஏற்ப தரமான கல்வியை வழங்கும் நிறுவனமாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சிகிச்சையாளர்கள் மற்றும் மருத்துவ சேவை வழங்குநர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக சுகாதார அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்ததுடன், நிறுவனத்தின் உபகரணங்கள் மற்றும் கட்டிடங்களை முறையாகப் பராமரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
ஆசிரியர்கள் மற்றும் நிறுவன ஊழியர்களின் நலனையும் உறுதி செய்வது முக்கியம் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.





