மட்டக்களப்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐவர் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பகுதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல்வேறு துப்பாக்கிச் சூட்டு மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பிலேயே இந்த வழக்கு முன்னெடுக்கப்படுகிறது.
இவ்வழக்கில் சந்தேகநபர்களான பிள்ளையான், முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகியோர் இன்று சிறைச்சாலையிலிருந்து Zoom தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை பரிசீலித்த பதில் நீதவான், மூவரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, வழக்கில் மற்றுமொரு சந்தேகநபராக குறிப்பிடப்படும் லண்டனில் வசித்து வருவதாகக் கூறப்படும் ‘முகமட் பாய்ஸ்’ என்பவருக்கு எதிரான திறந்த பிடியாணையும் மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளன.





