இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவிடம் DNA பரிசோதனைக்காக இரத்த மாதிரியைப் பெற உத்தரவிடக் கோரிய மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கொழும்பு சிவில் மேன்முறையீட்டு உயர்நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விமானி ராசிகா செவ்வந்தி தாக்கல் செய்துள்ள வழக்கில், தனது குழந்தையின் தந்தை சாமிக்க கருணாரத்ன என அறிவிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரை குழந்தையின் தந்தையாகப் பதிவு செய்து பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கு பதிவாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையில் 2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் தொடர்பு இருந்ததாகவும், கர்ப்பம் ஏற்பட்ட பின்னர் குழந்தையின் தந்தை என்ற பொறுப்பை அவர் ஏற்க மறுத்ததாகவும் மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது.
எனினும், சாமிக்க கருணாரத்ன இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்துள்ளதுடன், DNA பரிசோதனைக்கு உட்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நீதிமன்றம் DNA பரிசோதனைக்கு போதுமான காரணங்கள் முன்வைக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டு, இரத்த மாதிரியைப் பெறுவதற்கான கோரிக்கையை முன்னதாக நிராகரித்திருந்தது.





