போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்காக தேவையான சட்ட மற்றும் அரசியலமைப்பு மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் தயங்காது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை பொலிஸாரின் 160ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் போதைப்பொருள் தொடர்பான பல்வேறு சுற்றிவளைப்புகள் மற்றும் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் நீண்ட காலம் எடுத்துக்கொண்டால் அதன் பயன் குறைவதாகவும் சுட்டிக்காட்டினார்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான வழக்குகள் மற்றும் தண்டனை வழங்கும் நடவடிக்கைகள் தாமதமின்றி இடம்பெற வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
⚖️ நீதித்துறை நடவடிக்கைகள் உட்பட குற்றவியல் நீதி செயல்முறையில் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் மேலும் திறம்பட செயல்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பையும் நாட்டில் அமைதியான சூழலையும் உறுதி செய்வதற்காக ஏற்கனவே சில சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தேவையேற்பட்டால் மேலதிக அரசியலமைப்பு திருத்தங்களும் கொண்டுவரப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.





