இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று (09) பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, தேசிய நெருக்கடிகள் மற்றும் ‘தித்வா’ புயலினால் ஏற்பட்ட பேரழிவு நிலைமைகளின் போது இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய தொடர்ச்சியான ஆதரவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.
மனிதநேய மற்றும் பேரழிவு நிவாரண நடவடிக்கைகளின் கீழ் இந்தியாவினால் முன்னெடுக்கப்பட்ட “ஒப்பரேஷன் சாகர் பந்து” நடவடிக்கைக்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இலங்கை–இந்தியா இடையிலான உறவுகள் இராஜதந்திர மற்றும் பொருளாதார ஒத்துழைப்பைத் தாண்டி, நீண்டகால கலாசார, வரலாற்று மற்றும் மத உறவுகளால் வலுப்பெற்றுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தகம், அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா இலங்கையின் முக்கிய பங்காளியாக இருப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் அவசியம் குறித்தும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, சுற்றுலா மற்றும் கல்வித் துறைகளில் பிராந்திய ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை பல்கலைக்கழகங்களுக்கும் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (IITs) உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலம் அறிவுப் பரிமாற்றம், புத்தாக்கம் மற்றும் திறன் விருத்தியை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.





