சூடானின் மேற்கு கோர்டோஃபான் மாகாணத்தில் உள்ள தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 82 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நுஹுத் நகருக்கு அருகிலுள்ள அல்-சாரா (Al-Zara) தங்கச் சுரங்கத்திலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து அதனுடன் இணைந்திருந்த ஏனைய பகுதிகளும் சரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளில் போதிய இயந்திர வசதிகள் இல்லாததால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஒரே ஒரு Forklift இயந்திரம் மட்டுமே மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும், 30 மீற்றருக்கும் அதிகமான ஆழத்தில் சிக்கியுள்ளவர்களைத் தேடுவது கடினமாக இருப்பதாகவும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்துவரும் நிலையில், பலர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களின் நிலைமை தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதி, சூடான் இராணுவத்துடன் நீண்டகாலமாக மோதலில் ஈடுபட்டுவரும் Rapid Support Forces (RSF) கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான சிறிய அளவிலான மற்றும் முறைசாரா தங்கச் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன.
சுரங்கப் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாததன் காரணமாக சூடானில் இதுபோன்ற சுரங்க விபத்துகள் அவ்வப்போது இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.





