உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த மருந்து வணிகரான ஆயுஷ் மாலிக், தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே இஸ்லாம் மதத்தைத் தழுவியதாக அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம், ஆயுஷ் மாலிக்கின் தனிப்பட்ட சுதந்திரத்தை உறுதி செய்துள்ளது.
நீதிபதி சந்தீப் ஜெயின் தலைமையிலான அமர்வு, ஆயுஷ் மாலிக் வயது வந்தவர் என்றும், தனது வாழ்க்கை தொடர்பான முக்கிய முடிவுகளைத் தானே எடுக்கும் சட்ட உரிமை அவருக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு தனது விருப்பத்தின் பேரிலேயே இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டதாகவும், அந்த முடிவில் எந்தவிதமான அழுத்தம், மிரட்டல், தேவையற்ற செல்வாக்கு அல்லது தூண்டுதல் இடம்பெறவில்லை என்றும் ஆயுஷ் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அவருக்கு சட்ட உதவி வழங்கிய ‘Association for Protection of Civil Rights’ (APCR) அமைப்பு, மதத்தைத் தேர்ந்தெடுப்பதும், தனது விருப்பப்படி திருமணம் செய்வதும் வயது வந்த ஒருவரின் தனிப்பட்ட உரிமை என தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஆயுஷின் தந்தை தேவராஜ் மாலிக் அளித்த புகாரின் அடிப்படையில், ‘சதித்திட்டமிட்டு மதமாற்றம் செய்ததாக’ குற்றச்சாட்டில் ஆயுஷின் மனைவி எனக் கூறப்படும் சாந்த்னி குரேஷி மற்றும் அவரது தந்தை இஸ்லாம் குரேஷி ஆகியோரை ஷாம்லி பொலிஸார் கடந்த ஜூன் மாதம் கைது செய்திருந்தனர்.
இதற்குப் பின்னர், ஆயுஷ் மாலிக் பூஜை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்ற காணொளி ஒன்றும் ஜூன் மாத இறுதியில் வெளியாகியிருந்தது.
இந்த வழக்கில், ஆயுஷ் மாலிக் தனது மதம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான முடிவுகளைத் தானாகவே எடுக்கக்கூடிய வயது வந்தவர் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.





