முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தொடர்பில் Interpol ‘Blue Notice’ ஒன்றை கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்று வரும் குற்றவியல் விசாரணைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துக்குச் சொந்தமான 7.8 மில்லியன் ரூபாய் நிதியை பயன்படுத்தி ஊவா மாகாண சபைத் தேர்தல் காலத்தில் 12,000 டி-ஷேர்ட்கள் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவமும் உள்ளடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் 1.5 ஏக்கர் காணியொன்றை சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் நிதியை பயன்படுத்தி கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கும் பெசில் ராஜபக்ஷவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Interpol-ன் Blue Notice என்பது ஒரு நபரின் அடையாளம், இருப்பிடம் அல்லது நடவடிக்கைகள் தொடர்பில் மேலதிக தகவல்களை சர்வதேச சட்ட அமுலாக்க அமைப்புகளிடமிருந்து பெறுவதற்காக பயன்படுத்தப்படும் சர்வதேச அறிவித்தலாகும்.
இந்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள Interpol, மேலதிக தகவல்களை கோரியுள்ளதாகவும், அதற்கான ஆவணங்களை இலங்கை அதிகாரிகள் தயாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





